சைவமும்சமஸ்கிருதமும்-1
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vGxAPFuTOqVqJme3nx_l6fc-zdEH0fy_tYGfnk6UWtRiBAdfO1DEiTcG4PQfmzSQ1Vr1Y9ZfQ0iXeTzW0-RhJBneW4TLEVVE3VlcGbCE5dGQvIrLx5jrXzzOCoqwnQb5coTv9PtQcHQ4Ww6fL3DSypiu_KMEFhk2mg0gXSf1nFNg=s0-d)
முதல் நூல்
சேனாவரையமும், நன்னூல் விருத்தியும் தமிழ் இலக்கண நூலரைகள். அவற்றுள் சேனாவரையும் ‘வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொது’ என்றது. விருத்தி ‘ஆரியச்சொல் எல்லாத் தேயத்திற்கும் விண்ணுலக முதலியவற்றிற்கும் பொது’ என்றது. அதனால் சம்ஸ்கிருதம் பாரததேசத்தின் பொதுமொழி, எல்லா மகாணங்களுக்கும் சமமாக வுரியது. தமிழகத்துக்கும் அதுவே யென்பது சித்திக்கிறது.
இருக்கு முதலிய நான்கும் வேதங்கள், காமிக முதலிய இருபத்தெட்டும் சிவாகமங்கள். அவை முதன் முதல் அம்மொழியிலுளவாயின. அவை முதல் நூல்கள். அவற்றை யாக்கிய முனைவனார் பரமசிவனார். அதுபற்றி அம்மொழி சைவசமயத்துக்கு விசேடமாகவும் உரியதாயிற்று. ‘ஆரியத்தோடு செந்தமிழ்ப்பயனறிகிலா வந்தகர்’, ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்றது திருமுறை.
அம்முதல் நூல்கள் சைவசமயத்துக்குச் சர்வபிரமாண சாத்திரங்கள். மந்திர ‘மறைநாலுந் தம்பாட் டென்பர்’, ‘மிக்க வேத மெய்ந்நூல்’, ‘தெருளு நான்மறை’, ‘பண்டாய நான்மறை’, ‘முடிவில்லா வோத்து’, ‘சுருதிமறை நான்கான செம்மை’, ‘ஆரணம் பொழியும் பவளமாய்’, ‘வைதிகத்தின் வழியொழுகாதவக் கைத்தவம்’, ‘மறைவழக்க மிலாத மாபாவிகள்’, ‘பதிக நான்மறை’ , ‘இருக்கு நான்மறை’, ‘தொல்லிருக்கு மறை யேத்துகந்து’, ‘சந்தோக சாமமோதும் வாயான்’, ‘வேதவேதாந்தன்’, ‘ மறையீறறியா மறையோன்’, ‘சுருதி சிரவுரை’, ‘வேத விழுப்பொருள்’, ‘வேதாந்த நிலைக்குறை’, ‘தெய்வ நான்மறைகள் பூண்ட தேரானை’, ‘மந்திமுந் தந்திரமுந் தாமே’, ‘அண்டர் தமக்காகமநூல் மொழியும்’, ‘அரவொலி யாகமங்கள றிவாரறி தோத்திரங்கள் விரவிய வேதவொலி விண்ணெலாம்வந் தெதிர்த் திசைப்ப’ என்றது திருமுறை.
அவ்வடிகளில் அம்முதனூல்களின் பெயர்கள், அடைகள், சரிதைகள் முதலிய வுள. அவற்றை நோக்குக. அம்முதனூல்களைப்பற்றிய துதிகள் புலனாம். வைணவமுந்தமிழ் நாட்டுச் சமயமாம். சிலர் கருத்தது. அச்சமய நூல் நாலாயிரப்பிரபந்தம். அதுவும் ‘இருக்கெசுர் சாமவேத நாண் மலர்…..’ என்று பெயர் வரிசை கூறித்துதித்தது.
சைவ விதி
மக்கள் அரசின் வழியாகத் தமக்கெனச் சட்ட திட்டங்களை வகுத்துகொள்வர். அவை இலெளகிக விதி, அவ்வகுப்பில் காலதேசங்களுங் கவனிக்கப்படும். ஆதலின் அவ்விதியை வசதிப்படி மாற்றுவர், நீக்குவர். வேறும் வகுப்பர் அவர். அது குற்றமாகாது. ஏன்? உலக சுகமே அதன் குறிக்கோள். இன்னொன்று சமய விதி. அஃதிங்குச் சைவ விதி. அதை வகுத்தவர் பரமசிவனார். அது தான் அம்முதனூல்கள். சைவசமூகம் சைவாலாயம் சைவாதீனம் எல்லாம் அந்நூல்களைப் போற்றுக, விசுவசிக்க, அவற்றின் வரம்புக்குள் அடங்குக. அவற்றில் விதித்தவாறே ஒழுகுக. அவ்வளவே அவற்றின் கடன்.‘மெய்ச்சுருதி விதிவழியோர் தொழும்’ என்றது திருமுறை. காலம் தோறும் இவ்வுலகில் சைவ மக்கள் வருகின்றனர், வாழ்கின்றனர், மாள்கின்றனர். அவ் வக்காலத்து அவர் தொகை கைம்மண்ணளவே. ஆனால் உலகம் அழியும். அதுவரை எதிர்காலத்திலும் அவர் வந்து போய்க் கொண்டிருப்பர். அத்தனை பேரையுஞ் சேரக் கணக்கிடுக. அத்தொகை உலகளவிற்கும் அதிகமாகும். சைவ விதி அவர்க்கும் உரியது. அதை அக்கைம்மண்ணளவினர் தம் காலமிட முதலியவற்றிற்கு கேற்ப மாற்றலாமா? அதற்கவர் யார்? அவ்வுலகளவினர்க்குப் பிரதிநிதிகளா? மேலும் அவ்விதிக்குக் குறிக்கோள் வீடுபேறு. காலம் இடம் முதலியவற்றால் அவ்விதி பாதகமடையாது.
No comments:
Post a Comment