14/04/2013

ஈழத்தமிழருக்கு நாம் செய்யவேண்டியது என்ன?


  தமிழகத்தில் மாணவர்கள் மகத்தான தன்னெழுச்சியுடன் போராடுகிறார்கள், சரி. இந்தப் போராட்டத்தின் தலையாய கோரிக்கைகள் என்னென்ன?

 1. இலங்கை நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான சர்வதேச விசாரணை நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.


2. ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தனித்தமிழீழம் வேண்டும்.


  தமிழகத்துக்குத் தனி வெளியுறவுத் துறை வேண்டும் என்பது உள்பட இன்னும் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன.




  இவை எல்லாம் யாரை நோக்கி விடுக்கப்படும் கோரிக்கைகள் தெரியுமா? இந்தியவிலிருக்கும் காங்கிரஸ்  அரசை நோக்கி. அதாவது, எந்த அரசு ஈழப் போரைப் பின்னின்று இயக்கியது என்று இவர்களால்  குற்றம்சாட்டப்படுகிறதோ, அந்த அரசை நோக்கி!



 சர்வதேச விசாரணை என்று நாம் யாரை மனதில் வைத்துக் கேட்கிறோம்? அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளை. அதாவது, எந்த நாடுகள் எல்லாம் ஈழப் படுகொலையின் பின்னணிச் சதியில் பங்கு வகித்தனவோ, அந்த நாடுகள் விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனில், நம்முடைய கோரிக்கைகள் எந்த அளவுக்குக் கள யதார்த்தத்துடன் பொருந்துபவை?


  இவை எல்லாம் எந்த அளவுக்கு ஈழத்தில் வாழும் தமிழர்களின் இன்றைய பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டவை?


 போரில் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்ட நிலையில், மறுவாழ்வுக்கென உருப்படியாக எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காத சூழலில், வேலைவாய்ப்பின்மையால் சூழும் வறுமைதான் ஈழத் தமிழர்களின் இன்றைய தலையாயப்   பிரச்னை. போருக்குப் பின்னரும் வீதிக்கு வீதி நிற்கும் ராணுவமும், திட்டமிட்டு நடத்தப்படக்கூடிய சிங்களமயமாக்கமும்தான் அவர்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரும் அரசியல் நெருக்கடிகள்.


  ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், எந்த மக்களுக்காக அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த மக்களின் அன்றாட வாழ்வில் அந்தப் போராட்டத்துக்கான நெருக்கடியும் தேவையும் இருக்க வேண்டும். போராட்டத்தின் தேவை - தீர்வு குறித்த தெளிவு அந்த மக்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, சம்பந்தப்பட்ட மக்களின் கையில் அந்தப் போராட்டம் இருக்க வேண்டும்.




  இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஈழப் போர் ஒரு பெரும் குற்றவுணர்வை உருவாக்கி இருக்கிறது. இயலாமையும் அரசியல் கையாலாகாத்தன்மையும் சேர்த்து உருவாக்கிய குற்றவுணர்வு அது. வெறுமனே ஒழிக கோஷம் போடுவதால் மட்டும் அந்தக் குற்றவுணர்விலிருந்து நாம் வெளிப்பட்டுவிட முடியாது.


 இன்னும் ஒருபடி மேலே போய், தமிழகம் வரும் சிங்களர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சூழலை மேலும் நாசப்படுத்தக் கூடியவை.


 இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த நேரம். நாசகார ஆயுதங்கள் சூழ பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த சூழலில், கொழும்பில் தங்களுடைய இறுதி வான் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள்.


  இலங்கை ராணுவம் சுதாரித்துக்கொண்ட நிலையில், புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட பெரிய சேதம் இன்றி தோல்வியில் முடிந்தது அந்தத் தாக்குதல்.


 ஒருவேளை புலிகள் கணக்குப்படி அந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், அதிகபட்சம் ஐந்நூறு அறுநூறு சிங்களர்கள் செத்திருக்கலாம். ஆனால், பதிலுக்குத் தமிழர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்? புலிகளிடம் அன்று வெளிப்பட்ட அதே தவறான ராஜதந்திரம்தான் இன்றைக்குத் தமிழகம் வரும் சிங்களர்களைக் குறிவைத்துத் தாக்குவோரிடமும் வெளிப்படுகிறது.


 அன்றைக்குப் புலிகளின் மனதை ஆக்கிரமித்தது சாகச மனோபாவம் என்றால், இன்றைக்கு  வன்முறையில் இறங்கும் ஈழ ஆதரவாளர்களை ஆக்கிரமிப்பது கும்பல் மனோபாவம். 


  இனவெறிக்கு எதிராக நாம் களம் இறங்குவதாகச் சொல்கிறோம். ஆனால், அதே இனவெறியைத்தான் நாம் வெளிப்படுத்துகிறோம்.  



தமிழர் வீரம்

இலங்கையில் வாழும் தமிழர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதோடு மட்டும் இல்லாமல், போருக்குப் பின் மெல்ல இன அடிப்படைவாதப் போட்டியிலிருந்து விலகி, வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசியலை மீண்டும் இன அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளவும் இது வழிவகுக்கும்.


  இன்னும் இந்தியாவுக்குள்ளேயே நம்முடைய நிலைப்பாட்டை எதிர்க்கும் ஏனைய மாநிலத்தவர்கள் மீது நாம் வெளிப்படுத்தும் ஆத்திரம் ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தவே செய்யும்.


 ஈழப் போரின் பின்னணி ஒரு சர்வதேச சதி. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா... எந்த ஓர் நாடும் இனி ஒருபோதும் ஈழ விடுதலைக்கு உதவாது.


 இன்றைக்கு ஈழத் தமிழர்களின் உடனடித் தேவை பொருளாதார மீட்சியும் ராணுவமயமாக்கலிலிருந்து விடுவிப்பும். இலங்கை அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நாம் உணர்த்த வேண்டிய முதல் உண்மை தமிழர்கள் நலனின்றி இலங்கையில் அமைதி சாத்தியம் இல்லை என்பதை.


 ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த நம்முடைய எந்தப் போராட்டமும் இந்தக் கள யதார்த்தச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டே தொடங்க வேண்டும். வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்களின் மன ஆறுதலுக்காகவோ, தமிழக அரசியல் கட்சிகளின் குற்றஉணர்வை மறைப்பதற்காகவோ நாம் போராடுவதால், யாருக்கு என்ன பயன்? ஈழத்தில் வாழும் தமிழர்களின் சுதந்திரமும், நல்வாழ்வும், எதிர்காலமும்தான்  நமது இலக்காக இருக்க வேண்டும்!


இலங்கைத்தமிழருக்காக இவ்வளவு போராட்டம் நடத்தும்  நாம் ,  நமது நாட்டில் இன்னும் அகதிகளாக வாழும் இலங்கைத்தமிழரின் நிலை எப்படி உள்ளது?  அவர்களை  தமிழர் நலனுக்காக கூப்பாடு போடும் கட்சிகளின்  ஆட்சிகளில் எப்படி நடத்தினார்கள், இப்பொழுதுஎப்படி நடத்துகிறார்கள் என்பதையும் சிறிது சிந்தித்து  மனசாட்சியோடு செயல்பட்டால்  இன்னும் 

நன்றாக இருக்கும்.



கொத்தடிமைகளைவிட மோசமாக மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்ட விலங்குகளைப்போல் நம்மால் நடத்தப்படும் அந்த அகதிகளிடம்  முதலில் நாம் நமது மனிதாபிமானத்தையும்  இனப்பற்றையும் காட்டுவோம், கௌரவமாக அவர்கள் வாழ நம்மால் வழிசெய்யமுடியும், முதலில்  நாம் அதைச்செய்துவிட்டு பிறகு ராஜபட்சாவை என்னசெய்யவேண்டுமோ  அதை செய்யலாம்.

    
  ஈழத் தமிழர்கள் நலனில் நாம் உண்மையாகவே அக்கறை காட்டுகிறோம் என்றால், நாம் பணிகளைத் தொடங்க வேண்டிய இடம் இதுதான்.


  •  முதலாவது, அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள்,  இதில்  தமிழகத்தில் உள்ள தமிழ் அகதிகட்கு  இரட்டைக்குடியுரிமை அளித்தல் மற்றும்  அவர்களுக்கு இங்கு  வாக்குரிமை அளித்தால் ஆகியன அடங்கும்   
  • இரண்டாவது ராணுவமயமாக்கலை உடைப்பதற்கான நடவடிக்கைகள்,
  •  மூன்றாவது சிங்களமயமாக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்...
  • இந்த வரிசையின் கடைசி கட்டத்தில்தான் தமிழீழத்துக்கான நடவடிக்கைகள் அமையலாமே தவிர, முதலாவதாக அல்ல.
சித்தித்து  இனியாவது  செய்வன  திருந்த செய்வோம் . 


இணைப்பு

இன்னும் ஏன் அகதி முகாம்?

First Published : 08 April 2013 02:22 AM IST
தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா சென்ற சில மாதங்களிலேயே தங்களுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால் வாழ்வுதேடித் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், இங்கே படித்துப் பட்டம் பெற்றாலும்கூட, இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலையும் கிடைப்பதில்லை, தனியார் அலுவலகங்களிலும் வேலை கிடைப்பதில்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 132 முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் வாழ்க்கைச் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த அகதிகளுக்கு, மிகச் சிறிய அளவில் நிதியுதவியும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமா?
தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இலங்கை அகதிகள் முகாம்கள்  முற்றிலும் புறக்கணிக்கப்படுவதும், சந்தேகத்துடன் பார்க்கப்படுவதுமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இலங்கை அகதிகளை, தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொண்ட தமிழக அரசியல் கட்சிகள், அவர்களது வாழ்வாதாரம் குறித்துப் பெரிதும் பேசியதில்லை என்பதும் நிலைமை மோசமானதற்கு இன்னொரு காரணம்.
மேலும், அகதிகளை வைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் கொழித்தனர் என்பது மற்றுமொரு கசப்பான உண்மை. இவர்களுக்கான நிதியுதவியில் கையாடல் செய்யப்பட்டது.
 தமிழ்நாட்டில் எத்தனை இலங்கை அகதிகள் இருக்கிறார்கள், முகாமைவிட்டு வெளியேறித் திரும்பாதவர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம்கூட முறையாக இல்லாத நிலையில்தான் வருவாய்த்துறை இருக்கிறது.
ஒவ்வொரு அகதியும் முகாமில் உள்ள பதிவேட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் அவர் எங்கே சென்றிருந்தார் என்பதற்குச் சரியான விளக்கம் சொல்ல வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேலாக முகாமில் இல்லாமல்போனால் அவர் பெயர் நீக்கப்பட வேண்டும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். முகாமுக்குத் திரும்பாதவர் இலங்கை சென்றாரா, அல்லது வேறு மாநிலத்துக்குச் சென்றாரா, அல்லது வருவாய்த் துறைக்கு பல பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, குடும்ப அட்டை பெற்று இந்தியக் குடிமகன் போலவே மாறிவிட்டாரா என்பதைக் கண்டறிய வேண்டும். ஆனால், வருவாய்த் துறையும் காவல்துறையின் "கியூ' பிராஞ்சும் இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரியவில்லை.
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகளை நடுக்கடலில் இருந்து அழைத்து வந்து, இருபத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக, இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல், நாகையில் ஒரு மண்டபத்திலேயே தங்க வைத்திருக்கும் அரசு அதிகாரிகளின் நோக்கம் என்ன? இவர்களில் பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் 75 பேரை மட்டுமே நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். மற்றவர்களை ஏன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை?
காரணம், இவர்கள் தங்கள் முகாம்களைவிட்டு வெளியேறி பல நாள்களாகியும், இவர்களது பெயர் இன்னும் நீக்கப்படாமல் இருக்கக்கூடும். ஆகவே அதை சரி செய்வதற்காக நடவடிக்கையைத் தாமதப்படுத்துகிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இவர்களில் பலர் அகதிகள் அல்ல, இந்தியர்கள்தான் என்பதாகக்கூட இருக்கலாம்.
"இலங்கை அகதிகள்' என்ற போர்வையில் ஆஸ்ரேலியாவிலும், கனடாவிலும் தஞ்சம் அடைந்து பிறகு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முற்பட்டவர்களும் சரி, இந்தியாவில் சொந்தங்களும், சொத்துகளும் உள்ளவர்களாய், முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்களும் சரி, தொழில்செய்து வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது, ஏழை இலங்கை அகதிகள் மட்டும் சிறைக்கைதிகள் போல வாழும் நிலைமை எந்த வகையிலும் நியாயமற்றது.
அவர்களுக்கான நிதியுதவி, கல்வி, தொழில் ஆகியவற்றுக்கு இந்திய அரசு  முன்னுரிமை தந்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்க வேண்டும். அல்லது முகாம்களைக் கலைத்துவிட்டு, முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும்  வாழ்ந்துகொண்டிருக்கிற - பதிவு செய்திருக்கும் - இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தர வேண்டும். அதன்பிறகு மற்ற இந்தியர்களைப் போல தம் உழைப்பாலும் திறமையாலும் அவர்கள் வாழ்க்கை நடத்த நாம் வழிவகுக்க வேண்டும்.
வங்கதேச அகதிகளும், இலங்கை அகதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்குள் வந்து  கொண்டே இருக்கிறார்கள். வங்கதேச அகதிகளில் பலர் அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக மாறி, இந்தியர்களிலிருந்து பிரித்தறிய முடியாதபடி கலந்துவிடுகின்றனர். இந்தியாவில் பணம் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது சிரமம்  அல்ல என்பதால், அந்த வாக்கு வங்கியை அசாம் மாநில அரசியல்வாதிகள் தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.
அதெல்லாம் போகட்டும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி, முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் பற்றிக் கவலைப்பட்டதுண்டா? குறைந்தபட்சம் ஏதாவது ஒரு அகதி முகாமுக்கு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் போனதுண்டா? போக மாட்டார்கள். காரணம், இலங்கை அகதிகள் வங்கதேச அகதிகள்போல இவர்களுக்கு வாக்கு வங்கிகளாகப் பயன்பட மாட்டார்கள். அவர்களால் இவர்களுக்கு அரசியல் ஆதாயமும் கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களில் விருப்பமுள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிட்டு, இங்கேயே வாழ விரும்புகிறவர்களுக்கு, இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாத நிலையில், இந்தியக் குடியுரிமையேகூட அளித்துவிட நாம் பரிசீலிக்க வேண்டும்.
இனியும் தமிழகத்தில் அகதிகள் முகாம்கள் தேவையில்லை!

10/07/2012

ஹிந்துகுஷ் - பெயர்தரும் பாடம்


இந்தபடத்தில் நாம் காணும் அழகிய நடனம் ஐரோப்பாவின் செக் குடியரசின் தலைநகரான ஃப்ராக் கில் ஜிப்சிகள் எனப்படும் நாடோடிக்கூட்டத்தினரால் நிகழ்த்தப்பட்டதாகும். இம்மக்கள் ஐரோப்பா முழுவதும் பரவி உள்ளனர். இவர்களை இவர்கள் தங்கி இருக்கும் நாடுகள் பெரும் தொல்லையாகக் கருதுகின்றன.இவர்கள் அங்கெல்லாம் சம உரிமையுடன் நடத்தப்படுவதில்லை. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த இன ஒழிப்புக் கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட இனம் இந்த ஜிப்சிகளாவர். இவர்கள் அங்கு ரோமானிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் நாட்டைப்பொருத்து வேறுபட்ட மொழிகளைப் பேசுகின்றனர்.


இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மனியைத்தூய்மைப்படுத்தும் நோக்கில் ஹிட்லரால் ஏராளமாகப் படுகொலைசெயப்பட்ட ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் இந்த ரோமானிகள் கூட்டமாகும். இன்றும் ஐரோப்பாவில் இவர்கள் வெறுப்புணர்வுடனேயே பார்க்கப்படுகிறார்கள்.

இங்கு ஆசியாவில், ஹிந்துகுஷ் மலைத்தொடர் என்பது 1000 மைல் நீளமும் 200 மைல் அகலமும் கொண்ட மலைத்தொடராகும், இம்மலைத்தொடர் மத்திய ஆசியாவின் அமுதார்ய நதிப்பள்ளத்தாக்கையும், சிந்து நதி பள்ளத்தாக்கையும் பிரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரின் உப தொடராகும். இம்மலைத்தொடரானது 23000 அடிக்கும் கூடுதலான உயரம்கொண்ட 12 க்கும் மேற்பட்ட பனிமூடிய சிகரங்களைக்கொண்டதாக உள்ளது. இதன் பெரும்பகுதி ஆப்கானிந்தானிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ளது. இம்மலையின் சரிவுகள் தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிறாததால் அவை பசுமை ஏதுமின்றி வறண்டு காணப்படுகின்றன.


கைபர் கணவாய் இம்மலையில்தான் அமைந்துள்ளது. இந்திய சமவெளிக்குள் நுழைவதற்கான நுழைவாயில்போல் அமைந்துள்ளது. மற்ற எந்த வழியைவிடவும் பஞ்சாப்பிற்குள் நுழைய இது மிகவும் எளிய வழியாகும். போர் முக்கியத்துவம் வாய்ந்த இப்பாதை வழியாகத்தான் அலெக்சாண்டர் முதல் (327 BC), தைமூர் (1398 AD), முஹம்மது கஜினி (1001 AD), நாதிர்ஷா (1739 AD) என அனைத்துப்படையெடுப்பாளர்களும் நமது நாட்டைத்தாக்கினார்கள். இம்மலைக்கு நமது முன்னோர்கள் வைத்த பழையபெயர் "பாரியாத்ர பர்வதம்" என்பதாகும்


ஹிந்துகுஷ் பகுதி பழங்காலத்தில் (1000 AD) வரை வாஹிக் பிரதேஷ் மற்றும் காந்தாரதேசத்தில் இருந்தது. காந்தார தேசத்தின் எல்லை இந்த ஹிந்துகுஷ் மலையையும் தாண்டி பரவி இருந்தது. இந்த காந்தாரதேசமானது அயோத்தியை ஆண்ட பரத சக்ரவர்தியின் பேரனான தக்ஷன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. இந்நாடு தக்ஷசீலத்திலிருந்து இன்றைய உஸ்பெக்கிஸ்த்தானின் தக்ஷகண்ட் (தாஷ்கண்ட்) வரை பரவியிருந்தது. மஹாபாரத இதிஹாசத்தில்வரும் காந்தாரியும், அவர் சகோதரர் சகுனியும் இந்நாட்டு அரசகுடும்பத்தினராவர்.

அதன்பிறகு சந்த்ரகுப்தமௌரியராலும் மௌரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் சில கிரேக்கஇன ஆட்சியாளர்களாலும் ஆளப்பட்டது. அவர்களில் சிலர் பௌத்தர்களாகவும் சிலர் வைஷ்ணவர்களாகவும் இருந்தனர். பேக்டிரியாபகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் அவற்றை உறுதிசெய்கின்றன.


அதன்பின் ஆண்ட கனிஷ்க்கரது காலத்திலும் பிறகு அப்பகுதியை ஆண்ட ஷாஹியா வம்ச மன்னர்களின் ஆட்சியின்போதும் இப்பகுதி ஹிந்துக்களும் பௌத்தர்களும் வாழும் பகுதியாக சீருடனும் சிறப்புடனும் இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்த்தான் மீதான முஸ்லிம் படையெடுப்பு 642 AD வாக்கில் தொடங்கியது. பலமுறை முஸ்லிம்களால் அரசுகளும் நகரங்களும் தாக்கி கைப்பற்றப்பட்டபோதும் அவர்கள் மீண்டும் மீண்டும் புரட்சிசெய்து தமது மதத்தையும் நாடு நகரங்களையும் மீட்டபடியே இருந்தனர்.1000AD வரை இப்பகுதி ஹிந்துமதத் தொட்டிலாக இருந்தது. 


இப்பொழுது ஆப்கானிஸ்தானம் ஒரு முஸ்லிம் தேசம். அவ்வாறானால் ஆப்கானிஸ்த்தானின் உண்மையான குடிமக்களுக்கு என்ன ஆகியிருக்கும்? அவர்கள் அனைவரும் என்ன காரணத்தினால் முஸ்லிம்களாக மாறினர்? கீழே நாம் காண்பவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்கள்தான் இன்னிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.


  1. ஹிந்துகுஷ் பகுதியின் பூர்வகுடிகள் அனைவரும் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டிருக்கவேண்டும் அல்லது
  2. அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு அவர்தம்நாடு ஆக்கிரமிப்பாளர்களால் சொந்தமாக்கிக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லது
  3. அவர்கள் தமது சொந்த மன்னிலிருந்து துரத்தப்பட்டிருக்கவேண்டும்.


கி.பி 8 ஆம் நூற்றாண்டுமுதல் 11 ஆம் நூற்றாண்டுவரை ஹிந்துகுஷ் மலைப்பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் தமது ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் மதமாற்ற முயற்சிக்கும் அப்பகுதிகளின் பூர்வகுடிகளாகிய ஹிந்துக்களிடமிருந்து விடாப்பிடியான எதிர்ப்பை சந்தித்தனர். இவ்வெதிர்ப்பை பல வரலாற்று பதிவுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. 

ஆகவே அவர்கள் மதமாற்றத்துக்கு இறையாகி இருக்க முடியாது.

வேறென்ன நடந்திருக்கும்?

ஹிந்துகுஷ் எனும் பெயரே அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக்கூறப் போதுமானதாகும்.

ஆம் நானும்கூட ஹிந்துகுஷ் எனும் பெயரைப் படிக்கும்போது அது இந்துக்களின் நினைவாக உள்ள பெருமைப்படத்தக்க பெயர் என்று எண்ணியதுண்டு, ஆனால் விவரம் தெரிந்தபிறகு.....அடக் கடவுளே!

ஹிந்துகுஷ் என்றால்- ஹிந்து கொலைகளம். அல்லது ஹிந்து கொல்லி. ஆம் இதுதான் பாரசிகமொழியில் ஹிந்துகுஷ் என்பதன் பொருள்.

அம்மலைப்பகுதியிலும், ஆப்கானிஸ்தானிலும் வாழ்ந்த பூர்வகுடிகளான இந்துக்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஹொன்டமிர் எனும் முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஆப்கானிஸ்த்தானில் 15,00,000 இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை பதிவுசெய்துள்ளார். 

அதுமட்டுமல்ல பலமுறை இந்தியாமீது படையெடுத்துவந்த இக்கொலைகாரர்கள் கொல்லப்பட்டதுபோக மீதமிருந்தவர்களை அடிமைகளாக்கி இம்மலைவழியே கொண்டு சென்றனர். அந்தமாதிரியான சமயங்களில் இம்மலையின் கொடுங்குளிர் தாங்காமல் லட்சக்கணக்கான அப்பாவி ஹிந்துக்கள் உயிரை விட்டனர். எஞ்சியவர்கள் அடிமைகளாக வாழவேண்டியதாயிற்று. 

இவ்வாறு முஸ்லிம்களால் அடிமைகளாக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் எல்லாம் எங்கே?

இதற்கானபதில் 1993ம் வருடத்திய நியூயார்க் டைம் பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ளது (மே-ஜூன்). 

ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள அனைத்துநாடுகளிலும் யாருமற்ற அனாதைகளாக நாடோடிகளாக சுற்றிக்கொண்டிருக்கும், ஹிட்லரால் விஷவாயுசெலுத்திக் கொல்லப்பட்ட 3,00,000 பேர்களை இழந்த மக்கல் கூட்டமான ஜிப்சிகள்தான் அவர்கள். ஐரொப்பாவில் சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களது மொழி ஐரோப்பிய மொழி குடும்பம் அல்ல. அது பஞ்சாபி மொழியை ஒத்த சமஸ்கிருத வார்த்தைகளையும் கொண்டிருக்கும் இந்திய மொழிக்குடும்பத்தைச்சார்ந்தது. ஜிப்சிகள் நாடோடிகளாக அலையத்தொடங்கியகாலம் முஸ்லிம்கள் நாடுபிடிக்கக் கிளம்பிய காலகட்டத்துடன் சரியாக ஒத்துப்போகிறது.

இதுதான் ஹிந்துகுஷ் மலைக்கும் ஜிப்சிகளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு. 

சொந்தமன்னிலிருந்து விரட்டப்பட்டஹிந்துக்களும் அடிமையாக்கப்பட்டு தப்பிப்பிழைத்த ஹிந்துக்களும் எங்கெங்கோ நாடோடிகளாக அலைந்து கண்டவரிடமெல்லாம் உதைபடுகின்றனர்.

நடந்த படுகொலைகளையும், முஸ்லிம் வெறியர்கள் நடத்திக்கொண்டிருக்கும் படுகொலைகளையும், வருங்காலத்தில் ஹிந்துக்களாகிய நமக்கு வரக்கூடிய ஆபத்தையும் தொடர்ந்து உணர்த்தும்விதமாக ஹிந்துகுஷ் தொடர்ந்து அவ்வாறே  இருக்கிறது.



இங்குநாம் வரலாற்றை மறந்துவிட்டோம், அதுகற்றுத்தந்த பாடத்தை மறந்துவிட்டோம். அன்றுபோலவே இன்றும் பிரிந்துகிடக்கின்றோம். ஆனால் முஸ்லிம் வெறியர்கள் அதேவெறியுடனும் பேராசையுடனும் குரூரத்துடனும் இன்னும் நம்மைத் தாக்கிக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நாம் என்னசாதி?, நமது மொழி என்ன? நாம் ஆரியானா? திராவிடனா? எதுவும் தேவை இல்லை.

அவர்களுக்குத்தேவை அடிமைகளாக நாம். ஆக்கிரமிக்க நமது மண்.

இங்கு எனக்கு நினைவுக்குவரும் பாடல்வரிகள் 

"விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்"

சகோதரர்களே நிலைமை மீண்டுமொருமுறை கைமீறும்முன் விழித்துக்கொள்ளுவோம். நமது வாரிசுகளாவது ஜிப்சிகளாகாமல் வாழட்டும்.

தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு


குமரகுருபரர் இதழ் - தலையங்கம்



சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சான்னித்தியங்களை, பிம்பத்தில் அபிஷேகித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கச் செய்யும் அதி சூட்சம முறையையே கும்பாபிஷேகம் என்கிறோம். வேத வேள்விகள் இறைவனையும் தேவதைகளையும் அவிர்ப் பாகத்தால் திருப்திப்படுத்தும் நுணுக்கமான தேவகன்மங்கள் ஆகும். இச்செயல்களால் திருக்கோயில் இறை திருமேனிகளில் சான்னித்தியம் பிரகாசிக்கிறது. அப்படிப்பட்ட திருமேனிகளின் முன் சென்று பயபக்தியுடன் வேண்டும் அடியார்களின் வேண்டுதல்கள் யாவும், வேண்டியாங்கு நிறைவேற்றப்படுகின்றன.

இறை திருமேனிகளின் சான்னித்தியத்தை மந்திரங்களாலும், நித்திய நைமித்திக வழிபாடுகளாலும் காப்பதும், மேம்படுத்துவதும் சமயச் சான்றோர்களின் கடமையாகும். இது, வரங்கள் வேண்டி ஏங்கிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி பக்தர்களின் நலன் சம்பந்தப்பட்டது. இது விஷயத்தில் கவனக்குறைவோ, மரபு மீறலே ஏற்படுத்திப் பக்தர்களுக்குப் பலன் கிடைக்காதபடிக்கு ஆக்கி, அவர்களின் தெய்வ நம்பிக்கையைப் பாழ்படுத்திவிடக் கூடாது.

வேதம் பொதுவானது. தனியொரு பிரிவினருக்கு என்றில்லாமல், தெய்வத்திற்கே உரிய மொழியில் வேதங்கள் உள்ளன. “வேதங்கள் இறைவனே அருளியவை” என்பதே நம் சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் அருளிய வேதங்களில் இறைவனே போற்றப்படுகிறான். “தன்னை ஒப்பார் பிறர் இல்லாமையால் தாமியற்றிய வேதங்களில் இறைவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டா” என்று, 300 ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைவரை சென்று, காசியில் சைவமும் தமிழும் பரப்பிய அருட்கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்குக் காரணம் சொல்கிறார்.

தமிழர்கள், ஆதியிலிருந்தே வேதங்களைப் போற்றி வந்துள்ளனர். மறை (வேத) வழக்கம் இல்லாதாரை “மாபாவிகள்” என்றே நம் சைவம் கடிந்து பேசுகிறது.

“வேதத்தில் உள்ளது நீறு”, “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என வேதத்தை ஏற்றுப் போற்றும் சைவத்தின் முதல் ஆச்சார்யர் திருஞானசம்பந்தப் பெருமான், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனொடு தேரரை”, “ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்த சங்கதபங்கமா........ ஆகதர்” என்றெல்லாம் வேதாகமங்களை வெறுத்த சமண சாக்கியர்களைப் பதிகந்தோறும் பத்தாவது பாடலில் சாடிப் பாடியுள்ளமையும், “மாசுமெய்யர் மண்டைத்தேரர், குண்டர், குணமிலிகள், பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்” என்று நமக்கு அறிவுறுத்தி யுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சமயங்கள் யாதாயினும் அதன் மரபுகளைக் கடைப்பிடிப்பதே அச்சமயிகளின் கடமை. அதில் மாறுபடுபவர்கள் அச்சமயத்திலிருந்து நீங்கியவராவர்.

“அனுச யப்பட் டதுஇது வென்னாதே 
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் 
புனித னைப்பூவனு னூரனைப் போற்றுவார் 
மனித ரில்தலை யான மனிதரே.”
- திருநாவுக்கரசர். 

கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகிய தொல்காப்பியத்தைக் கேட்டு அங்கீகரித்தவர் என்று அதன் பாயிரத்தில் “அதங்கோட்டாசான்” என்பவரை, பாயிரம் பாடிய தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரர் குறிப்பிடுகிறார். அதில் அவர் அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” எனக் குறிப்பிடுகிறார். சதுர்வேத பண்டிதராகக் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சேரநாட்டுத் தமிழர் ஒருவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியமும் வேதத்தை “அந்தணர் மறை” என்றே குறிப்பிடுகிறது.

இடைச்சங்க காலத்துப் பாண்டிய மன்னனாகிய முதுகுடுமிப் பெருவழுதி, வேத வேள்விகள் பல செய்வித்தமையால் “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.

தமிழின் மிகப் பழம்பெரும் அறநூலாகிய திருக்குறளும் “அந்தணர் நூ”, “ஓத்து” என்று வேதத்தைச் சொல்கிறது; “அவிஉணவு” என்று அவிர்ப்பாகத்தை - வேள்வி உணவைச் சொல்கிறது. திருக்குறள் “அறுதொழிலோர்” என்று குறிப்பிடுவதில் உள்ள ஆறு தொழில்களில், “வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேத வேள்வி செய்தல், வேத வேள்வி செய்வித்தல்” என்பன அடங்கும். திருக்குறளைத் “தமிழ் மறை” என்கிறோம். “மறை என்ற சொல் வடமொழி வேதத்தையே குறிக்கும். ஆகையினால் “தமிழ்” என்கிற முன் ஒட்டுச் சேர்த்துச் சொல்கிறோம்.

சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் அக்காலத்தில் வேத வேள்விகள் பரவலாக நடந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன.

காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் திருமணம் வேத முறைப்படி, “மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்தது” என்று வருகிறது. கண்ணகி கோட்டத்திற்குச் சேரன் செங்குட்டுவன் வேத விதிப்படி குடமுழுக்குச் செய்வித்தான்; அத்திருவிழாவில் வேள்விச் சாலைக்கு மாடல மறயோனும் செங்குட்டுவனும் சென்ற காட்சி இளங்கோவடிகளால் விவரித்துச் சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் நிலத்தில் - தமிழரின் வாழ்வில் வேதங்கள் - வேள்விகள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய ஆவணக் குறிப்புகள். தமிழில் வேதங்கள் என்றோ, தமிழில் வேள்விகள் என்றோ கூறுவதற்குச் சான்றே இல்லை.

தேவாரங்கள் வேதசாரங்கள். அவை கைகாட்டுவது வேதங்களி - ஆகமங்களை - வேத வேள்விகளை. திருமுறைகளில் வேத வேள்விகள் பற்றிய நூற்றுக்கணக்கான புகழுரைகள் உள்ளன. வேத வேள்விகளை நிந்தனை செய்வதை பெரும் குற்றமாகவே நம் திருமுறைகள் அறிவிக்கின்றன. அப்படிச் செய்பவர்களைப் புறச்சமயத்தார்களாகவே அவை புறந்தள்ளுகின்றன. திருமுறைகளில் மிகப் பழமையானது எனப்படும் திருமந்திரம், “வேதத்தைவிட்ட அறம் இல்லை” என்றதுடன், வேதம் பற்றித் தர்க்கவாதம் செய்தல் கூடாது எனவும் எச்சரிக்கிறது. வேதம், ஆகமம் பற்றித் தனித் தலைப்பிட்டே திருமூலர் கொண்டாடுகிறார். தன்னை நன்றாகப் படைத்தது, சிவனை நன்றாகத் தமிழ் செய்வதற்காக என்று குறிப்பிட்ட அவர், வேதங்களைப் புகழ்ந்ததை மட்டும் கண்டும் காணாமற்போவது எப்படி முறையாகும்?

தமிழருக்கென்று தனியொரு வேள்வி இருந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள் போன்ற அருளாளர்கள் வாழ்ந்த காலங்களில் தமிழில் வேள்வி, தமிழில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் மரபை மாற்றி யாரும் பேசவுமில்லை, செய்யமுற்படவும் இல்லை. எனவே அவை “மரபு மீறல்” எனச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை, அவர்களுக்கு எழவில்லை.

நாம் பேசுவது தமிழ். திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருமுறைப் பாடல்கள், “திருநெறிய தமிழ்” என்றும், அது இறைவன் தனது வாக்கென்றும் குறித்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாடுவார்க்கும் கேட்பார்க்கும்; அவர்க்கும் தமர்க்கும், இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் உண்டென்றும்; எல்லியும் பகலும் இடர் இல்லை என்றும், எல்லாப் பேறுகளும் கிட்டுமென்றும் அருளியுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருமுறையைக் கொண்டு வேள்வி செய்ய யாண்டும் அருளியதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் அனல்வாதப் புனல்வாதங்களால் திருநெறியத் தமிழ்த் திருமுறைகள் “வெந்தழலில் வேகாது, வெள்ளத்தால், போகாது” என்று மெய்ப்பித்துக் காட்டிய பின்னும், திருமுறைகளை குண்டத்திலும் குடத்திலும் செலுத்துவது நெறியல்லா நெறி என்று உணர வேண்டும். இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனும் அளிக்கும் தமிழை - திருமுறைகளை ஊடகங்கள் வழி செலுத்துவதுதான் தமிழுக்கும் திருமுறைக்கும் பெருமையா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறெல்லாம் சொல்வது இடையாயினார்க்கு, மறைகள் நிந்தனை சைவ நிந்தனைபொறா மனத்தினார்க்கு.

ஆங்கிலக் கல்வியை உயர்த்திப் பேசினால் அப்படிச் சொல்டவரை, யாரும் “தமிழ்த் துரோகி” என்று சொல்வது இல்லை. “தமிழும் வடமொழியும் சைவத்தின் இரு கண்கள்; திருமுறைகளும் வேதங்களும் நம் கண்மணிகள்” என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் மரபைச் சொன்னால், சிலர் தமிழ்ப் பற்றில்லாதவர்கள் என்ற ஆதாரவிரோத வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்கள்.

திருமுறைகள் ஓதுவதற்கு உரியன. அப்படித்தான் திருமுறை ஆசிரியர்களே நமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். திருமுறை ஓதினால் நிச்சயம் பயன் உண்டு. வேதங்களில் வேள்விச் சடங்குகள் உள்ளன. அந்தத் தேவை உள்ள இடங்களில் அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டும் தமிழ்ப் பற்று என்னும் போர்வையில் புகுந்து கொண்டு, வசதிக்காக - புகழுக்காக - பொருளுக்காக - கூட்டம் சேர்ப்பதற்காக – மரபுகளை மறைத்துப் பேசலாமா? செயற்படலாமா?

எதற்கு எது உரியதோ, அதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அறிவாற்றல்களால், ஞானத்தால் பழுத்த நம்முன்னோர்கள் எப்படிச் சொன்னார்களே அப்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு இல்லாத தமிழ் பற்று நம்மில் யாருக்கு இல்லை.

வேதங்களை உடன்படுபவர்களுக்குத்தான் “வேள்வி” என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி வரும்.

மழையை வரவழைக்க வேள்விகள் உள்ளன. அவை வேத வேள்விகள். ஆனால், சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் திருப்புன்கூர் தலத்தைத் தரிசனம் செய்தபோழ்து, “வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீரில்லாத காலத்தில் மழை பெய்ய” பன்னிருவேலி நிலம் இறைவர்க்குக் கொடுத்ததும், பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன்பொருட்டு ஏயர்கோன் கலிக்காமரிடம் மீண்டும் ஒரு பன்னிரு வேலி நிலத்தை இறைவன் பெற்றருளினான் என்ற வரலாற்றைத் திருப்புன்கூர்த் தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.

பெருமழையைத் தருவித்ததும், நிருத்தியதும் பக்தியே ஆகும். எனவே திருப்பதிகங்கள், ஓதிப் பயன்பெற உரியன என உணர வேண்டும். திருமுறைகளை ஓதினாலே பயனுண்டு என்ற சைவத்தின் அரிச்சுவடித் தத்துவத்திலே நம்பிக்கை வேண்டும். “பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு” (ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு) மழையை நிறுத்தினார் - திருமுறையைக் கொண்டு வேள்வி செய்து மழை பெய்யவில்லை.

வேள்வி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால் வேத வழிப்பட்டதாக ஆகிவிடும். வேதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் வேள்வியில் நம்பிக்கை உண்டு! அதையும் திருமுறைகளைக் கொண்டு செய்வது என்பது செய்யத்தக்க செயல் அல்ல என்பதை உணர வேண்டும். இத்தகு செயல்களை, கடந்த 50 ஆண்டுகட்கு முன்னர்வரை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். இத்தகைய “மரபு மீறும் செயல்கட்கு மறைகளோ, திருமுறைகளோ எந்த வழியும் வைக்கவில்லை” என்று தெரிந்தே அவ்வாறு செய்வது, திருமுறைகளில் ஆழங்காற்பட்ட பயிற்சி இல்லாத, தமிழ் ஆர்வம் என்ற மாயைக்கு உட்பட்ட, எளிய மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அதன்மூலம் புகழ், பொருள் சேர்க்கும் நோக்கமாகவே கருதப்படும். தமிழ்ப் பற்று - திருமுறைப் பற்று என்று கொள்ளப்பட்டாது.


நன்றி : http://www.shaivam.org

வேதாகம முறைப்படியே திருக்கோயில் பூசனைகள், நடைபெற வேண்டுமா?




திருச்சிற்றம்பலம்

முன்னுரை :

தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்கள், திருக்குறள், சைவ சமய சாத்திரங்கள், தோத்திரங்கள், புராணங்கள் அனைத்திலும் வேதத்தைப் பற்றிய செதிகள் உள்ளன. வேதத்தை மறுத்த செய்தி ஏதும் இல்லை. சைவ சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள், அதன் வழிவரும் ஆதீனம், திருமடங்களும் வேதாகமங்களை ஏற்றுப் போற்றுகின்றன. சிலர் தமிழிலும், திருமுறைகளிலும் இல்லாததை இருப்பது போல் "தமிழ் நெறி", "திருமுறை நெறி" என்று சொல்லி, "சலத்தாற் பொருள் செய்து ஏமார்த்தல்" செய்து வருகின்றனர். அது கூடாதென்பதை, 5, 6, 7-02-2010-இல் தில்லையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலகச் சைவ மாநாட்டின் நிறைவு நாளில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட செய்தியை, காசிமடம் வெளியிட்ட "வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறை விளங்க!" என்ற நூலின் முன்னுரையின் முதலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதத்தை 'உலகத்தார் உண்டு' என்று ஏற்பதையும் காட்டி உள்ளோம். 'எத்திறத்தானும் தேறார்' என்ற நிலையில் இதுதான் அது, அதுதான் இது என்பதுபோல் பேசியும் எழுதியும் வருகின்றனர். தெளிவுபெற விரும்புபவர்களுக்கு பயன்படும் என்று கருதி இது எழுதப்பெறுகிறது.

ஏத்தல் - வழிபாடாகுமா?

ஏத்து - ஏத்து! என்னும் ஏவல் - துதி.
ஏத்தல் - துதித்தல், வணங்குதல்.
ஏத்துதல் - துதித்தல், வணங்குதல்.
(வெள்ளி விழா - தமிழ்ப் பேரகராதி - 1, பக்.264)
இம்மூன்று சொற்கள் பூசை செய்தலைக் குறிக்காது. தோத்தரித்தல், அட்டாங்க, பஞ்சாங்க வணக்கங்கள், கைகூப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.

இறைவனை எம் மொழியிலும் துதிக்கலாம். பதினெட்டு மொழிகளில் ஏத்தலாம் என்பது சரியே. மேலும், அறிந்த மொழி எதுவாயினும் அவ்வம் மொழியும் துதிப்பதற்கு உரியதே. இல்லுறை தெய்வத்தைத் தீட்சை பெற்றவர்கள், குரு உபதேசித்தபடியும், ஏனையோர் அறிந்த மொழிகளிலும் தோத்தரிக்கலாம். சித்தாந்த சைவர்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடித் துதிப்பதே சிறப்பு. பாடும் வாய்ப்பு இல்லாதவர்கள் வந்தவணம் ஏத்தலாம்.

கோயில்களின் பூசனை என்பது வேறு. அதனை வேதாகம நெறிப்படி, சிவாசாரியர் செய்ய வேண்டும். வழிபட வரும் பக்தர்கள் அரன் சிந்தனையே கொண்டு பிற சிந்தனைகளை மறந்து திருமுறைகளைப் பாடுதல் - சொல்லுதல் வேண்டும்; அல்லது அரன் நாமங்களைச் சொல்லுதல் வேண்டும்.

சிவாசாரியர்கள் மட்டுமின்றித் துறவியரும் வேதாகம நெறிப்படி இறைவைப் பூசித்தற்கு உரியவரேயாவர்.

"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
- (திருவா. போற்றி.164, 165)

என்ற தொடர்களை மகுடமாகச் சொல்கிறோம். தென்னாட்டவர் துதிக்க உரிய சிவன் எந்நாட்டவரும் உரிய இறைவனாவார். தென்னாட்டவர் தென் மொழியிலும், அவ்வந் நாட்டவர் அவ்வம் மொழிகளிலும் துதிசெய்ய - தோத்தரிக்க ஆகமத்தில் விதியுள்ளது. எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவன் என்பதால், எந்நாட்டவர்க்கும் பொது மொழியாக நம் சமயம் விதித்துள்ள - இறைமொழியில் வழிபாட்டுக் கிரியைகளைச் செய்ய வேண்டும். 'ஆகமம் ஆகி என்று அண்ணிப்பான் தாள் வாழ்க' என்ற திருவாசகத் தொடரை உரக்க முழக்கம் செய்துவிட்டு அவ்வாகம விதிக்கெதிரான சதிசெய்பவர்களை என்னவென்று சொல்வது.

தமிழ் வேதங்கள் இருந்தன. அவை மறைந்தன. மறைந்தவற்றிலிருந்து தோன்றியவை வடமொழி வேதங்கள் என்றெல்லாம் எழுதப்பெறுவன கற்பனை வாதங்கள். பல நல்லறிஞர்களால் பலமுறை மறுக்கப்பட்ட பின்பும், மறுப்பைக் காணாமல் கேளாமல் மீண்டும் மீண்டும் சொன்னவற்றையே சொல்லுவது நன்றன்று. எந்தவொரு சமயமும் தன் மூல முதல் நூலை எந்த நிலையிலும் இழக்காது. எத்தகைய நிர்ப்பந்தத்தாலும் இழப்பை ஏற்படுத்த முடியாது. வேதமே மறைந்திருந்தால் - மொழி மாற்றப்பட்டிருந்தால் உலக வரலாற்றில் குறிக்கத்தக்க அவ்வளவு பெரிய அசாதாரண நிகழ்ச்சியைப் பின்னர் வந்த கவிஞர்கள் கதறிக் கதறிப் பதிவு செய்திருப்பார்களே!? நடக்காத கதையைச் சொல்லி நம்மை நாமே ஏன் தாழ்த்திக்கொள்ள வேண்டும்?

காலில் முள் குத்தினால் காலுக்கு மட்டும் துன்பம் என்பதில்லை. கண்களில் நீர் வரும்; ஒட்டுமொத்த உடம்பையுமே அசௌகரியப்படுத்திவிடும். திருமுறைகள் காட்டிய மறைவழியைத் திருமுறைகளைக் கொண்டே கிரியைகள் செய்து கொச்சைப்படுத்தும் செயல்களை, எங்கோ சிலர்தானே செய்கிறார்கள்; அதைப் பொருட்படுத்த வேண்டாமே எனச் சிலர் கருதக்கூடும். பேருருவுடைய நம் உயிர்ச் சைவ சமயத்தின் பேரால் செய்யப்படும் அந்த, மரபுப் பிறழ்ச்சி முள் குத்துவது போன்றது. சைவ சமயப் பேருருவில் அங்கங்களான சைவர்கள் அனைவரையுமே அத்தீச்செயல் அசௌகரியப்படுத்திவிடும். ஆகவே அந்த முட்களை தூக்கித் தூர எறிந்து, திருமுறைப் பெருமைகளை நாம் காத்தாக வேண்டும்.

'காத்தாள்பவர் காவல் இகந்தால்' சமயம் கறைபட்டுப்போகும். சைவத்திற்குக் காத்தாள்பவர் உள்ளனர். பதினெட்டு ஆதீனங்கள், சைவம் காக்கத் தோன்றியவை. அவ்வாதீனங்களில் சிலவற்றுக்குத் தக்க வாரிசுகள் கிடைக்காத நிலையும் உள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தண்டல்காரர்கள் புறப்படுகின்றனர். இறைவனின் திருவருளால், பதினெண் ஆதீனங்களில் சிலபல ஆதீனகர்த்தர்களாகிய காத்தாள்பவர்கள், பிறர் பிறர் செய்யும் மரபுப் பிறழ்ச்சிகளை அனுமதிக்காமல் வேத நெறிச் சைவத்தைக் காத்தாளும் கடமையைச் செய்து கொண்டுதான் உள்ளனர். ஆசாரிய பீடங்களில் உள்ள அவர்களை மதியாமல் ஒதுக்கினால், தத்தம் பிழைகளைப் - பிழைப்புகளைக் கூச்சமின்றிச் செயற்படுத்தலாம் என்று மரபுப் பிறழ்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

திருமுறைகளைக் கும்பாபிஷேகக் கிரியைகளுக்கும், திருக்கோயில் வழிபாட்டுக் கிரியைகளுக்கும், திருமணம் முதலிய வாழ்வியல் கிரியைகட்கும் பயன்படுத்துபவர்கள் திர்முறைகளின் உயர் தரத்தைக் குறைப்பவர்களே ஆவர். அவர்களிடம் திருக்கோயில்களில் குடமுழுக்கு, இல்லறத்தில் திருமணம் போன்ற கிரியைகள் செய்ய வேண்டுமென்று விதிக்கும் விதிநூல் உண்டா? திருமுறைகளால் கிரியைகள் செய்வதற்கு, ஆட்சி உண்டா? ஆவணம் உண்டா? முன்னோர்களாகிய சான்றோர்களின் சாட்சி உண்டா? என்ற நம் வினாக்களுக்குப் பதிலில்லாமையால், சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் எத்திறத்தாலும் திருந்தாதவர்களாக உள்ளனர். சென்ற நூற்றாண்டில் தோன்றிய வேத மறுப்புச் செய்திகள் மறுக்கப்பட்டவை. திருமுறைச் சடங்குகளுக்கு அவைகள் விடைகள் ஆகா என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை.

சமயம், சமயச் சடங்குகளில் நம்பிக்கை என்பதே சமயியின் முதல் தகுதி. வேதாகம முறைப்படியே திருக்கோயில் பூசனைகள், நடைபெற வேண்டும்; அவ்வாறே தொன்றுதொட்டு நடந்தன. படைப்புக் காலம் தொட்டுச் சைவத்தின் கோட்பாடுகளும், நியதியும், நடைமுறையும் இவையே என்பதற்கான மிகப்பல ஆட்சிகள், ஆவணங்கள், சமயாசாரியர், சந்தானாச்சாரியர்கள், சமயச் சான்றோர்களின் திருவாக்குகள் ஆகியவற்றை காசிமடம் எழுதிய நூல்களில் தந்துள்ளார்கள். தொடர்ந்து நம் ஸ்ரீகுமரகுருபர திங்களிதழில் மெய்யுரை, வைதிகச் சைவம் ஆகிய தொடர்களில் தெரிவித்து வருகிறார்கள். அவற்றைக் கற்றுத் தெளிந்து மிகப் பலர், திருமுறைகள் போற்றும் நான்மறைச் சைவச் செந்நெறியில் பிடிப்புக்கொண்டுள்ளமை பரம்பொருளின் கருணையினாலேயே ஆகும்.

"........................ - வீழ்த்த 
புறநெறி ஆற்றாது அறநெறி போற்றி 
நெறிநின்று ஒழுகுதிர் மன்ற 
துறை அறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே"

என்றருளிய நம் ஆதி முன்னவராகிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளின் அறவுரை முழுமையாக வென்றேறும்.


நன்றி : http://www.shaivam.org