10/07/2012

வேதம் என்றால் வடமொழி வேதத்தையே குறிக்கும் என்பது ஏன்?


இனச்சுட்டு - இனம் காட்டும் சுட்டு; இரண்டும் பலவும் இருந்தால் ஒன்றை அடையாளப்படுத்தும் சுட்டு.

ஞாயிறு என உதிப்பது ஒன்றுதான். அது தரும் வெயிலை, ஞாயிற்று வெயில் என்றாலே போதும். திங்கள் என உதிப்பது ஒன்றுதான். அது தரும் நிலவை, திங்கள் நிலவு என்றாலே போதும். ஒன்றே ஒன்றாக இருப்பவற்றிற்கு இனம் காட்டும் சுட்டு, பேச்சு வழக்கில் தேவையில்லை. செய்யுள் வழக்கில் ஒன்றே ஒன்றானவற்றிற்கும் பண்புச் சொல்லை இனம் சுட்டும் வகையில் சொல்லலாம் என்று,

'இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கு ஆறு அல்ல; செய்யுள் ஆறே'


என்ற நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணம் 'செஞ்ஞாயிற்று வெயில் வேண்டினும், வெண் திங்களின் நிலவு வேண்டினும்' என்ற செய்யுள் தொடர். இதில், கரு ஞாயிறு என வேறொரு ஞாயிறோ, கருந்திங்கள் என வேறொரு திங்களோ இல்லையென்றாலும், 'செஞ்ஞாயிறு' என்றும், 'வெண்திங்கள்' என்றும் இனங்காட்டும் பண்படை வருகிறது.


மொழியால் இனஞ்சுட்டுதலும் உண்டு, மொழி, பண்பன்றெனினும் இனம் சுட்டத் தேவைப்படும். தண்டியார் என வடமொழிப் புலவர் ஒருவர்; தண்டியார் எனத் தமிழ்ப் புலவர் ஒருவர். இருவரும் ஒருவரே என்ற ஆய்வும் உண்டு. வடமொழியில் தண்டியார் செய்த நூல் 'காவ்யாதர்கம்' தமிழில் தண்டியார் செய்த நூல், ஆக்கியோன் பெயரால் தண்டியலங்காரம் எனப்படுகிறது. இரண்டும் அணி இலக்கண நூல்கள். தமிழில் உள்ள தண்டியலங்காரப் பாடலை, மேற்கோள் சொல்லும்போது, 'என்றார் தமிழ்த் தண்டியார்' என மொழிப் பெயரை இனம் சுட்டும் சொல்லாகச் சேர்த்துச் சொல்கிறோம்.

தமிழில் நான்மறை, வடமொழியில் நான்மறை என இரண்டு இருக்குமானால், மொழிப் பெயரைச் சேர்த்து இனம் சுட்டாவிட்டால், எந்த மொழியின் நான்மறை எனக் குழப்பம் ஏற்படும். தமிழில் எக்காலத்தும் நான்மறை - வேதம் இன்மையால், வடமொழியில் மட்டுமே நான்மறை - வேதம் உள்ளமையால் நம் முன்னோர் நான்மறை - வேதம் எனப் பொதுவாகவே குறிப்பிட்டனர்.

'அந்தணர் மறை' என்பதில் உள்ள அந்தணர் என்பது அடையாளப்படுத்துகின்ற இனச்சுட்டு ஆகாதா? என ஒரு வினா வரலாம். 'இந்தப் பெரியபுராணம் என்னுடையது' என்று ஒரு நூல் பிரதியைச் சுட்டிக்காட்டும்போது, பயன்பாட்டினால் உள்ள உரிமையை அடையாளப்படுத்துகிறோம். பயணங்களின்போது முன் பதிவு செய்த இடத்தை 'இது என் இடம்' என்கிறோமே அதைப்போல, குலத் தொழில்கள் ஆறனுள் ஒன்றாக வேதம் ஓதுதல், அத்யயனம் செய்தல் உரிமை பற்றிய சிறப்பு அடையே 'அந்தணர் மறை' என்பது. அந்த அடையில் அந்தணர்க்கு மட்டுமே உரிமையுடையது என்ற குறிப்பும் இல்லை. எனவே இது பயன்பாடு தொடர்பான அடைவே அன்றி இனச்சுட்டு ஆகாது.

எனவே, நான்மறை என்பதற்கும் வேதம் என்பதற்கும் மொழி குறித்த இனச்சுட்டு யாண்டும் இன்மையால் தமிழில் நான்மறை இருந்ததில்லை என உணர்க.

வேத காலம் - சைவத்தின் கொள்கை என்ன?

வேத காலம், தொல்காப்பியர் காலத்திற்குச் சில பல நூற்றாண்டுகட்கு முற்பட்டது எனச் சொல்லுவதுகூட, நம் சமய மரபுக்குப் புறகாகும். அநாதி காலத்தில் பெருமான் வேதம் அருளினார். ஒவ்வொரு யுகத் தொடக்கத்திலும் மீண்டும் மீண்டும் அவ்வவ்யுகங்களுக்கும் தருகிறார் என்பதே அனைத்துப் புராணங்களிலும் சூதர் அருளிய செய்தியாகும். திருவிளையாடற் புராணத்தில், வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலத்தில், பெருமான், ஓரூழியை ஒடுக்கிப் பிறிதோரூழியை மலர்த்திய நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. புது ஊழியில் மீண்டும் பெருமான் திருவாக்கிலிருந்து ‘பிரணவம் உதித்து, அதனிடை வேதம் பிறந்தன’ (செ.4) என வருகிறது. இதுவே நம் சமயம் சொல்லும் வேதகாலமாகும். வேதாகமங்கள் என்றும் உள்ளவை. அவற்றின் பூசனைகள், சடங்குகள், கிரியைகள் மூலமான மையக் கோட்பாட்டினின்றும் பிறழ்வதில்லை.

இறைவன் வேதத்திற்குத் துணையாக ஆறு அங்கங்களையும் தோற்றுவித்தார். அனைத்தின் மூலங்களும் பெருமானின் அருளிப்பாடுகளே. வியாசர் நெறிப்படுத்துதலாகிய தொகுப்பு முறை செய்தார். வியாசரைப் பெருமைப்படுத்த - அப்பணி செய்ய - பெருமான் அவருக்கு அருள்பாலித்தார். பெருமான் அருளிய அதி நுட்ப மந்திரங்கள் முதலியவற்றுடன், அவர்தம் அருளாரமுதத்தில் ஊறித் திளைத்த இருடிகள் முதலாயினோரின் படையல்களையும் இணைத்து வகுத்ததில் வேத நுட்பங்கள் சற்றே இளகின. வேதங்களின் உண்மைப் பொருள் இறைவனால் மட்டுமே தரக்கூடியவை என்பதற்கான சான்றுகளை காசிமட நூல்களில் தந்துள்ளார்கள்.


நன்றி : http://www.shaivam.org

No comments:

Post a Comment